'செப்டம்பர் 11' தாக்குதல் நினைவு தினம்: விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நாசா

Image Tweeted By @NASAhistory
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிராங்க் கல்பர்ட்சன் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை கொண்டு மோதி தகர்த்தனர். அத்துடன், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சிலிவேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தினர்.
இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் 9/11 பயங்கரவாத தாக்குதல்களின் நினைவாக அன்றைய நாளில் நாசாவின் விண்வெளி வீரர்களில் ஒருவர் விண்வெளியில் இருந்து நியூயார்க் நகரத்தை எடுத்த புகைப்படத்தைப் நாசா டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
செப்டம்பர் 11, 2001 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிராங்க் கல்பர்ட்சன் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் மன்ஹாட்டனில் தாக்குதலின் போது பெரும் புகை மூட்டம் எழுவதைப் பார்க்க முடிகிறது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அந்த பயங்கரமான நாளின் 21வது ஆண்டு நினைவு நாளில், 9/11 தீவிரவாத தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் மாவீரர்களை நாங்கள் கவுரவிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.






