2 வாரங்களில் 6-வது முறை 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா அதிரடி


2 வாரங்களில் 6-வது முறை 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா அதிரடி
x

அமெரிக்க படைகளுடன் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தென்கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வடகொரியா செயல்பட்டு வருகிறது.

சியோல்,

தென்கொரியாவின் கங்னியுங் நகரில் அமெரிக்கா நேற்று முன்தினம் 4 ஏவுகணைகளை ஏவி சோதித்தது. தென்கொரியாவும் 2 ஏவுகணைகளை தன் பங்குக்கு வெற்றிகரமாக சோதித்தது. இருப்பினும் அந்த நாட்டின் ஹியூமூ-2 என்கிற குறுகிய தூர 'பாலிஸ்டிக் ' ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் வடகொரியா நேற்று அடுத்தடுத்து 2 குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக் ' ரக ஏவுகணைகளை சோதித்தது. முதல் ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டது. இது 100 கி.மீ. உயரத்துக்கு சென்று 350 கி.மீ. தொைலவுக்கு பறந்தது. மேலும் 2-வது ஏவுகணை 50 கி.மீ. உயரத்திற்கு சென்று 800 கி.மீ. தொலைவுக்கு பறந்தது.

அமெரிக்கா தனது விமானம்தாங்கி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். ரொனால்டு ரீகனை கொரிய தீபகற்ப பகுதியில் நிறுத்தியுள்ள நிலையிலும் வடகொரியா அதற்கும் அஞ்சாது அதிரடியாக 2 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்து இருப்பது சர்வதேச அரங்கை அதிர வைத்துள்ளது. கடந்த 2 வாரங்களில் வடகொரியா நடத்திய 6-வது ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story