வடகொரியா ஏவுகணை சோதனை; பரபரப்பான ஜப்பான்: மக்கள் உடனே வெளியேற உத்தரவு


வடகொரியா ஏவுகணை சோதனை; பரபரப்பான ஜப்பான்:  மக்கள் உடனே வெளியேற உத்தரவு
x
தினத்தந்தி 13 April 2023 5:29 AM GMT (Updated: 13 April 2023 5:30 AM GMT)

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துகிறது என்ற எச்சரிக்கை தகவலை தொடர்ந்து மக்களை உடனடியாக வெளியேறும்படி ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

டோக்கியோ,

ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், இன்று காலை நடுத்தர அல்லது நீண்ட தொலைவு சென்று தாக்க கூடிய வகையிலான ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்துகிறது என்ற எச்சரிக்கை தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து, ஜப்பான் அரசு, ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுங்கள், வெளியேறுங்கள் என அவசரப்படுத்தியது. பொதுமக்கள் கட்டிடத்திற்கு அடியிலோ அல்லது நிலத்திற்கு அடியிலோ சென்று மறைவாக பதுங்கி கொள்ளுங்கள் என அறிவுறுத்தியது.

இதுபற்றி ஜப்பான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தகவலை சேகரிக்க மற்றும் ஆய்வு செய்ய முடிந்த வரையிலான முயற்சியில் ஈடுபட அர்ப்பணிப்புடன் செயல்படவும். பொதுமக்களுக்கு விரைவான, போதிய தகவலை வழங்கவும்

விமானம், கப்பல் மற்றும் பிற பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும். வருங்காலத்தில் நிகழ கூடிய அனைத்து விசயங்களுக்கும் தயாராவது உள்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளது.

எனினும், அந்த ஏவுகணை வடகொரியாவுக்கு கிழக்கே கடலில் விழுந்து இருக்க கூடும் என ஜப்பானின் கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது.

பாதுகாப்பு மந்திரி யசுகாஜூ ஹமடாவும் அந்த ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பில் விழவில்லை என தெரிவித்து உள்ளார். தி கார்டியன் வெளியிட்ட செய்தியில், ஹொக்கைடோ தீவை ஏவுகணை தாக்க கூடிய சாத்தியம் இல்லை என உள்ளூர் அதிகாரிகளும் தெளிவுப்படுத்தி உள்ளனர் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது.



Next Story