பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் புதிய நிதி மந்திரி பதவியேற்பு


பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் புதிய நிதி மந்திரி பதவியேற்பு
x

கோப்புப்படம்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் புதிய நிதி மந்திரியாக இஷாக் தார் நேற்று பதவியேற்றார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பண நெருக்கடியில் தவித்து வருகிறது. இதற்கிடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பருவமழை அந்த நாட்டை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய நிதி மந்திரியாக இஷாக் தார் நேற்று பதவியேற்றார். ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவரான இஷாக் தார் இதற்குமுன் 4 முறை நிதி மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

முந்தைய இம்ரான்கான் ஆட்சியில் இஷாக் தார் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் இருந்து தப்பிக்க அவர் கடந்த 2017-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அறிவுறுத்தலின் பேரில் லண்டனில் இருந்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் திரும்பிய இஷாக் தார், நாட்டின் புதிய நிதி மந்திரியாக நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு அதிபர் ஆரிப் அல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன் என இஷாக் தார் சூளுரைத்துள்ளார்.


Next Story