தைவானை சுற்றி சீனா தொடர்ந்து போர் பயிற்சி பதற்றத்தை அதிகரிப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு


தைவானை சுற்றி சீனா தொடர்ந்து போர் பயிற்சி பதற்றத்தை அதிகரிப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
x

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றது சீனாவை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது.

பீஜிங்,

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றது சீனாவை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. இதனால் மிரட்டும் விதமாக தைவானை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் சீன ராணுவம் கடந்த 4-ந்தேதி போர்ப்பயிற்சியை தொடங்கியது.

சீனாவின் இந்த போர்ப்பயிற்சி தங்கள் மீதான தாக்குதலுக்கான ஒத்திகையாக அமைந்துள்ளதாக தைவான் குற்றம் சாட்டியதோடு, போர்ப்பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் சீனாவை வலியுறுத்தியது. அதே போல் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் சீனா தனது போர்ப்பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தின.

ஆனால் இதற்கெல்லாம் செவி சாய்க்காத சீனா, ஏற்கனவே அறிவித்தபடியே நேற்று 4-வது நாளாக போர்ப்பயிற்சியை தொடர்ந்தது. இதனிடையே மஞ்சள் கடலின் தெற்குப் பகுதியில் வருகிற 15-ந்தேதி வரை போர்ப்பயிற்சியை தொடர உள்ளதாக சீன ராணுவம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, போர்ப்பயிற்சியின் மூலம் சீனா பதற்றத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சீனாவின் போர்ப்பயிற்சி ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற செயல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story