லாட்டரியில் கிடைத்த ரூ.250 கோடி பரிசு தொகை; சீனர் செய்த காரியம்...


லாட்டரியில் கிடைத்த ரூ.250 கோடி பரிசு தொகை; சீனர் செய்த காரியம்...
x

கோப்பு படம்

தினத்தந்தி 31 Oct 2022 3:50 PM GMT (Updated: 31 Oct 2022 3:58 PM GMT)

லாட்டரியில் ரூ.250 கோடி பரிசு பெற்ற சீனர் அதனை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்ததற்காக தெரிவித்த காரணம் ஆச்சரியமடைய செய்துள்ளது.



பீஜிங்,


சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் வசித்து வருபவர் லி. கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். இதுவரை சொற்ப அளவிலேயே அவருக்கு பரிசு கிடைத்து வந்துள்ளது. இந்த நிலையில், அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசியுள்ளது.

இதில், அவர் நினைத்து பார்த்திராத வகையில், இந்திய மதிப்பில் ரூ.248.42 கோடி அளவுக்கு அவருக்கு பரிசு தொகை கிடைத்துள்ளது. இதனால், மகிழ்ச்சியில் திளைத்து போய் உள்ளார்.

கடந்த 24-ந்தேதி பரிசு தொகையை அள்ளி கொண்டு வந்துள்ளார். அவர் தனக்கு கிடைத்த பரிசு தொகையில் ரூ.5.5 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்து இருக்கிறார்.

பரிசு தொகையை பெறுவதற்கு வழக்கம்போல் செல்லாமல் சிறுவர்கள் முதல் பலரும் விரும்பி பார்க்க கூடிய கார்ட்டூன் கதாபாத்திரம் ஒன்றின் வேடமணிந்து கொண்டு சென்று பணத்திற்கான காசோலையை பெற்று வந்து உள்ளார்.

சீனாவில் தனது அடையாளம் தெரியாமல் ரகசியமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற விசயங்களை மக்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம்.

சரி. பரிசை பெற்றாகி விட்டது. அடுத்து என்ன செய்வது என்று கூறும் அவர், எனது மனைவி, குழந்தைகளிடம் கூட இதுபற்றி தெரிவிக்கவில்லை. ஏனெனில், மற்றவர்களை விட தங்களை உயர்ந்தவர்கள் என அவர்கள் எண்ண தொடங்கி விடுவார்கள் என நினைத்தேன். அதனால், அவர்களிடம் தெரிவிக்காமல் மறைப்பது என முடிவு செய்தேன் என கூறுகிறார்.

சீன சட்டத்தின்படி, வரி மற்றும் தொண்டு நிறுவன நன்கொடை உள்ளிட்டவை போக அவர் ரூ.198 கோடியை வீட்டுக்கு எடுத்து செல்ல முடியும்.

லி கூறும்போது, 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்குகிறேன். கடந்த சில ஆண்டுகளாக ஒரே மாதிரியான 7 எண்களை தேர்வு செய்து வாங்கி வருகிறேன் என கூறியுள்ளார். அந்த எண்களுக்கு உண்மையாக இருந்ததற்காக இந்த முறை அவருக்கு பலன் கிடைத்து உள்ளது. பெரிய தொகையும் கிடைத்து உள்ளது.

லாட்டரி சீட்டுகளை வாங்குவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு என நினைத்து கொள்வேன். குடும்பத்தினரும் பெரிய அளவில் கண்டு கொள்வது இல்லை. நானும் அதிக தொகையை இதற்கு செலவிடமாட்டேன். இந்த லாட்டரி சீட்டுகள் எனக்கு நம்பிக்கையின் ஒளியை தந்தது என கூறுகிறார்.

எனினும், இந்த பரிசு தொகையை எப்படி செலவு செய்வது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என கூறும் லி, அதற்கு திட்டமிட சிறிது காலம் எடுக்கும் என கூறியுள்ளார்.


Next Story