உக்ரைன் படை தொடர் தாக்குதல்: கெர்சன் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் ரஷியா


உக்ரைன் படை தொடர் தாக்குதல்: கெர்சன் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் ரஷியா
x

Image Courtesy: AFP

ரஷியா ஆக்கிரமித்த கெர்சன் பிராந்தியத்தில் உக்ரைன் படை தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்ட ரஷியா, இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது.

பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும் ரஷிய தன்னுடன் இணைத்து கொண்டது. ஆனால் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டித்தன. இந்த நிலையில் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், உக்ரைனின் 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது இன்று ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கருங்கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் துறைமுகம் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும், மைகோலாயின் தெற்கு நகரம் கடுமையான குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளானதாகவும் உக்ரைன் தெரிவித்தது.

இதனையடுத்து, உக்ரைன் ரஷியா எல்லை பகுதியான பெல்கோரோட் பிராந்தியத்தின் ஒரு கிராமத்தில் உள்ள ரஷிய வெடிமருந்து கிடங்கு ஒன்று தகர்க்கப்பட்டது. உக்ரைன் படையினர் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இந்த கிடங்கு முற்றிலும் சேதமடைந்தது என்று ரஷியாவுக்கு உட்பட்ட பெல்கொரோட் பிராந்தியத்தின் கவர்னர் கூறினார்.

இந்த நிலையில், ரஷியா ஆக்கிரமித்த கெர்சன் பிராந்தியத்தில் உக்ரைன் தொடர்ந்து குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள 4 நகரங்களில் உள்ள மக்களை வெளியேற்ற ரஷியா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக கெர்சன் பிராந்திய கவர்னர் விளாடிமிர் சால்டோ கூறுகையில், கெர்சன் நகரில் உக்ரைன் படைகள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த ஏவுகணை தாக்குதல்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஓட்டல்கள், குடியிருப்பு பகுதிகள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெறுகிறது.

இதனால், கெர்சன் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை ரஷிய பிராந்தியங்களான ரோஸ்டோவ், கிராஸ்னோடர் மற்றும் ஸ்டாவ்ரோபோல் மற்றும் கிரிமியன் பகுதிகளுக்கு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. இதனை ஒழுங்கிணைக்க உதவுமாறு நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். கெர்சன் பகுதியில் வசிப்பவர்களான நாங்கள், ரஷியா தங்கள் சொந்தங்களை கைவிடவில்லை என்பதை அறிவோம். ரஷியா எப்போதும் எங்களுக்கு கைகொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story