விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை...!


விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை...!
x

சவுதி அரேபியா முதல் முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. ரயானா பர்ணாவி என்ற வீராங்கனை இந்த ஆண்டு விண்வெளிக்குச் செல்கிறார்.

சவூதி,

சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஏக்ஸ் -2 விண்வெளி பயணம் என்ற திட்டத்தின் கீழ் சவுதி அரேபியா தனது விண்வெளி ஆராய்ச்சியாளர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புகிறது. இதன்படி, 2023ஆம் ஆண்டின் மத்தியில் மேற்கொள்ள இருக்கும் விண்வெளிப் பயணத்தில் ரயானா பர்ணாவி என்ற விண்வெளி வீராங்கனையும் இடம்பெற்று உள்ளார்.

இவருடன் சவுதியின் விண்வெளி வீரர் அலி அல் கர்னியும் விண்வெளிக்குச் செல்கிறார். இவர்கள் பயணிக்க உள்ள விண்கலம் அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு பல அடிப்படை உரிமைகளை மறுத்துவந்த சவுதி அரேபியா படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரவேற்கத்தக்க முன்னேற்றமாக பெண் ஒருவர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது பெருமையை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகம் 2019ஆம் ஆண்டு தனது விண்வெளி வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பியது. அதன் மூலம் அரபு நாடுகளில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது.

முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 41 வயதான விண்வெளி வீரர் நெயாடி சுல்தான் ஆஃப் ஸ்பேஸ் என்று அழைக்கப்படுகிறார். அவர் இந்த மாத இறுதியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் மீண்டும் விண்வெளிக்குச் செல்கிறார். இதன் மூலம் ஆறு மாத காலத்தை விண்வெளியில் கழித்த முதல் அரபு நாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.


Next Story