சிங்கப்பூர்: இந்தியரான யோகா பயிற்சியாளர் மீது 5 இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு


சிங்கப்பூர்:  இந்தியரான யோகா பயிற்சியாளர் மீது 5 இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு
x

சிங்கப்பூரில் யோகா பயிற்சியாளரான இந்தியர் மீது 8 பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.


சிங்கப்பூர்,


சிங்கப்பூரில் திலக் ஆயெர் தெருவில் டிரஸ்ட் யோகா என்ற பெயரில் யோகா பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ராஜ்பால் சிங் (வயது 33) என்ற இந்தியர் யோகா பயிற்சியாளராக பணியாற்றி வந்து உள்ளார்.

4 ஆண்டுகளுக்கு முன் வேலையில் சேர்ந்த அவர் மீது 8 பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இதுபற்றி அடுத்தடுத்து 5 பெண்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

இதன்படி, 2020-ம் ஆண்டு ஜூலையில் ராஜ்பால் சிங் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார் என 24 வயது இளம்பெண் முதன்முறையாக குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

யோகா பயிற்சி முடிந்து வெளியே வந்த அவர், தனது தோழியிடம் வாட்ஸ்அப் வழியே, மையத்தில் தனக்கு நடந்த அனுபவங்களை விளக்கி உள்ளார் என தி ஸ்டிரெய்ட் டைம்ஸ் பத்திரிகை தகவல் தெரிவிக்கின்றது.

இதன்பின்பு பாதிக்கப்பட்ட இளம்பெண், யோகா மைய உதவி விற்பனை மேலாளரான கணராஜ் என்பவரிடம் நடந்த விவரங்களை பற்றி பேசியுள்ளார். தொடர்ந்து அடுத்த நாளும் இவர்கள் செய்திகளை பரிமாறி கொண்டனர்.

அடுத்த சில நாட்களில், ஜூலை 31-ந்தேதி டுவிட்டரில் தனது அனுபவங்களை இளம்பெண் வெளியிட்டார். இதனை தொடர்ந்து 28 மற்றும் 37 வயதுடைய இரண்டு பெண்கள் இதே அனுபவங்களை அந்த இளம்பெண்ணிடம் தெரிவித்து உள்ளனர்.

அந்த 28 வயது பெண் தனக்கு நடந்த அனுபவங்களை, பேஸ்புக்கில் வெளியிட்டார். இதனை பார்த்து, 24 வயதுடைய மற்றொரு பெண்ணும் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

எனினும், பாதுகாப்பிற்காக பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை கோர்ட்டு வெளியிடவில்லை. இந்த வழக்கில் 4 பேரும் 2020-ம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்டு வரையில் தனித்தனியாக போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

அவர்களில் ஒருவர் நேற்று கேமிரா வழியே வாக்குமூலம் வழங்கி உள்ளார். ஆனால், இந்த விவரங்களை ஊடகம் உள்பட பொதுவெளியில் வெளியிட கோர்ட்டு மறுத்து உள்ளது. ராஜ்பால் சிங் மீது இன்றும் விசாரணை தொடருகிறது.

இதுதவிர, 5-வது பெண் ஒருவரும் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். அதுபற்றி பின்னொரு நாளில் விசாரணை நடத்தப்படும். 5 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.


Next Story