ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தென்கொரிய முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு


ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தென்கொரிய முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு
x

Image Courtesy: AFP

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தென்கொரிய முன்னாள் அதிபருக்கு தற்போதைய அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான அரசு பொது மன்னிப்பு வழங்கி உள்ளது.

தென்கொரியாவில் கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர் லீ மியூங் பாக் (வயது 81). இவர் தனது பதவி காலத்தின்போது பல்வேறு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர் ஊழல் செய்தது நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு கடந்த 2020-ல் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த ஜூன் மாதம் அவர் பரோலில் வௌியே வந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அதிபர் லீ மியூங் பாக்குக்கு தற்போதைய அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான அரசு பொது மன்னிப்பு வழங்கி உள்ளது. இதன் மூலம் அவரது சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் தவிர மேலும் 1,372 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story