இலங்கையில் பொருளாதார குற்றங்கள் நடைபெறுகின்றன - ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் தகவல்!


இலங்கையில் பொருளாதார குற்றங்கள் நடைபெறுகின்றன - ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் தகவல்!
x

பொருளாதாரக் குற்றங்கள் இலங்கையில் நடைபெறுகின்றன என்ற ஐ.நா மனித உரிமைகள் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது.

ஜெனிவா,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று தொடங்கியது. அதில் இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

பொருளாதாரக் குற்றங்கள் இலங்கையில் நடைபெறுகின்றன என்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கூறுகிறது. இந்த குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது.

கடந்த வாரம், ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள், பொருளாதார குற்றங்கள் மற்றும் ஊழல் குற்றங்களுக்கு தண்டனையின்மை ஆகியவை தான் தற்போதையை பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படைக் காரணங்கள் என்று ஐ.நா அறிக்கை கூறியது.

மேலும், அந்த அறிக்கையில், தற்போதைய சவால்களை எதிர்கொள்ளவும், கடந்த கால மனித உரிமை மீறல்கள் நிகழாமல் இருக்கவும் அடிப்படை மாற்றங்களை செய்ய வேண்டுமென ஐ.நா அறிக்கை பரிந்துரைத்தது.

இந்த நிலையில், இன்று இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைகளுக்கான செயல் உயர் ஆணையர் நடா அல் நஷிப் சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் தேவையான ஜனநாயக மற்றும் பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள புதிய அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன் என்று உயர் ஆணையர் நடா அல் நஷிப் தெரிவித்தார்.

ஐ.நா சபையின் உயர்மட்ட அமைப்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபடுத்தியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையின் நிதி அமைச்சர் அலி சப்ரி இந்த அறிக்கையை எதிர்த்து பேசுகையில், இலங்கையில் பொருளாதாரக் குற்றங்கள் குறித்து இந்த அறிக்கை விரிவாகக் குறிப்பிடுகிறது. ஆனால் இது கவலைக்குரிய விஷயம். ஏனெனில் இத்தகைய குறிப்பு ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் பொறுப்பை மீறுவதாகும்.

இந்த தீர்மானத்தை மற்றும் அதை பின்தொடரும் நடவடிக்கைகளை நிராகரிக்க வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்படும். நாட்டில் மனித உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், பாதுகாப்பதற்கும் ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கம் தளராத அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

இந்த நிலையில், எந்தவொரு சர்வதேச நீதித்துறை தலையீட்டையும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகவே அரசாங்கம் பார்க்கிறது. ஆகவே அரசாங்கம் அதை எதிர்க்கும்.

மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை அரசு தொடர்ச்சியான ஈடுபாடு, ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தைப் பின்பற்றுகிறது. பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசு உடனடி பல்முனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்று இலங்கையின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் விடுதலை புலிகள் தொடர்பான போர்க்குற்றங்களுக்கான உரிமைப் பொறுப்புக்கூறலைக் கோரும் தீர்மானங்களை 2013ஆம் ஆண்டு முதல் ஐநா உரிமைகள் அமைப்பு கொண்டு வந்துள்ளது.

2015 இல் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு வழக்கறிஞர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் மற்றும் புலனாய்வாளர்களின் பங்கேற்புடன், காமன்வெல்த் மற்றும் பிற வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் நம்பகமான நீதித்துறை செயல்முறையை நிறுவ வேண்டும் என்று இலங்கைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், இந்த தீர்மனத்துக்கு இலங்கை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், செப்டம்பர் 23ஆம் தேதி இலங்கை தொடர்பான சாத்தியமான வரைவுத் தீர்மானம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது உறுப்பு நாடுகளிடையே வாக்கெடுப்பு நடத்தப்படும்.


Next Story