இலங்கை அதிபரின் அதிகார குறைப்பு மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்


இலங்கை அதிபரின் அதிகார குறைப்பு மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்
x

இலங்கை அதிபரின் அதிகாரங்களை குறைப்பதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது.

கொழும்பு,

கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு சிறிசேனா அதிபராக இருந்தபோது அரசியல் சட்டத்தில் 19ஏ திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க இந்த திருத்தம் வகை செய்கிறது.

பின்னர் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே, அந்த திருத்தத்துக்கு மாற்றாக 20ஏ திருத்தம் கொண்டு வந்தார். அதில், நாடாளுமன்றத்தை விட அதிபருக்கே கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.

ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், அதிபரின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதை ஏற்று, அரசியல் சட்டத்தில் 22-வது திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை இலங்கை அரசு உருவாக்கியது. அதில், அதிபரின் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டதுடன், நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.

இந்த மசோதா, இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதுபோல் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டின் முடிவு இலங்கை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனே தெரிவித்தார். அதிபரின் அதிகார குறைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ளுமாறு சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்து இருப்பதாக தெரிவித்தார்.

மசோதாவில் உள்ள சில உட்பிரிவுகள், அரசியல் சட்டத்துக்கு முரணாக இருப்பதால், அவை மீது நாடுதழுவிய வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் பெற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பதாக சபாநாயகர் கூறினார்.

பிரதமரை நீக்க முடியாது

இதுகுறித்து இலங்கை நீதித்துறை மந்திரி விஜேயதாசா ராஜபக்சே கூறியதாவது:-

இலங்கை அதிபராக இருந்தபோது, பிரதமரையும், மந்திரிசபையையும் நீக்குவதற்கு அதிபருக்கு உள்ள அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள கோத்தபய ராஜபக்சே விரும்பினார். எனவே, அவர் இருந்தபோது மசோதாவில் அந்த அதிகாரங்கள் பறிக்கப்படவில்லை.

ஆனால், அவர் பதவி விலகியவுடன், மசோதாவை திருத்தி விட்டோம். அதன்படி, பிரதமரையோ, மந்திரிசபையையோ நீக்க அதிபருக்கு அதிகாரம் கிடையாது. ஒருவரிடமே அதிகாரம் குவிந்திருப்பதை இந்த மசோதா தடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இந்த அரசியல் சட்ட திருத்த மசோதா நிறைவேறி சட்டமானால், 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் மீண்டும் நிலைநிறுத்தப்படும்.


Next Story