ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய காபி உணவகமாக உள்ளது. இந்நிறுவனத்தின் உணவகங்கள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ரெக்கிட் பென்கிசர் குழுமத்தின் லைசால் மற்றும் என்பாமில் பேபி பார்முலா ஆகிய நிறுவனங்களில் தலைமை நிர்வாகியாக பணியாற்றி உள்ளார்.
எங்கள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஒரு தனித்துவமான நபரை கண்டுபிடித்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம் என ஸ்டார்பக்ஸ் குழுவின் தலைவர் மெலோடி ஹாப்சன் தெரிவித்துள்ளார்.
லக்ஷ்மன் நரசிம்மன், ரெக்கிட் பென்கிசர் நிறுவனத்தில் இருந்து இந்த மாத இறுதியில் பதவி விலகுவார் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.