அமெரிக்காவில் மைப்பிரிஸ்டோன் கருக்கலைப்பு மருந்துகளை உபயோகிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


அமெரிக்காவில் மைப்பிரிஸ்டோன் கருக்கலைப்பு மருந்துகளை உபயோகிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x

அமெரிக்காவில் 56 லட்சம் பேர் உபயோகித்த மைப்பிரிஸ்டோன் கருக்கலைப்பு மருந்துகளை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான உரிமையானது, கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், தேசிய அளவிலான சட்டப்பூர்வ உத்தரவை கடந்த ஆண்டு ஜூனில், அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. இது பெண்கள் பலரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

நாடு தழுவிய போராட்டம்

இதனை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பெண்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர். கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், அதனை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டனர். கருக்கலைப்பு தங்களது உரிமை என்ற நோக்கில் அவர்கள் தொடர்ந்து குரலெழுப்பினர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட பலரும் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு விதித்த தடையை தொடர்ந்து, 13 அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை அமலில் உள்ளது.

எனினும், கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி அளிக்கப்பட்ட மாகாணங்களில், மற்ற மருந்துகளை போன்று மேற்கூறிய மாத்திரைகள் விநியோகத்தில் மருந்து நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. நேரடியாக விற்பனை செய்தும் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடனான குறிப்புகளின்படி மருந்துகளை மெயில் வழியே அனுப்பியும் வருகின்றன.

இருவேறு தீர்ப்பு

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தடை அமெரிக்காவில் ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியபோதும், டெக்சாஸ் மற்றும் வாஷிங்டனில் உள்ள நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை சமீபத்தில் வழங்கியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்படி, கருக்கலைப்பு மாத்திரைக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஒப்புதல் அளித்தபோதும், டெக்சாஸ் நீதிபதி, 7 நாள் காலஅவகாசம் கேட்டார்.

ஆனால், வாஷிங்டன் நகர அரசு நீதிபதி, மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட 12 மாகாணங்களில் இந்த மாத்திரை கிடைக்கும் வகையில் உணவு மற்றும் மருந்து கழகம் (எப்.டி.ஏ.) பார்த்து கொள்ள வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார். இதனால், நீதிபதிகளின் இருவேறு தீர்ப்பால் அடுத்து என்ன செய்வது என் தெரியாமல் மக்கள் மற்றும் அரசு திணறியது.

சுப்ரீம் கோர்ட்டு தலையீடு

இந்த சூழலில், கருக்கலைப்புக்கு அனுமதி அல்லது தடை ஆகியவற்றில் முடிவு எடுப்பதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது என கூறி கீழ் கோர்ட்டின் கட்டுப்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. இதன்படி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சாமுவேல் அலிட்டோ சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், புதன்கிழமை (19-ந்தேதி) இரவு 11.59 மணிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என கூறினார்.

எனினும், காலஅவகாசம் நிறைவான சூழலில், உத்தரவு எதுவும் பிறப்பிக்காத சூழலில், சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவை வெளியிட்டது. இதன்படி, கீழ் கோர்ட்டின் கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு வெள்ளி கிழமை (ஏப்ரல் 21) வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், கருக்கலைப்பு மாத்திரை மற்றும் மருந்துகளை பயன்படுத்துவது பற்றிய சர்ச்சை நீடித்து வந்தது.

கீழ் கோர்ட்டு உத்தரவுக்கு தடை

இந்நிலையில், இந்த மைப்பிரிஸ்டோன் கருக்கலைப்புக்கான மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் டான்கோ லேபரட்டரீஸ் என்ற நிறுவனம் மற்றும் அமெரிக்க அதிபர் பைடனின் நீதி துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அவசரகால வேண்டுகோள் விடப்பட்டது.

அதில், மைப்பிரிஸ்டோன் மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கும் கீழ் கோர்ட்டின் கட்டுப்பாட்டு உத்தரவுகளை தடை செய்யும்படி கோரப்பட்டு இருந்தது. அந்நாட்டில் மைப்பிரிஸ்டோன் மருந்துகளின் பயன்பாடு 2000-ம் ஆண்டில் இருந்து உணவு மற்றும் மருந்து கழகத்தின் ஒப்புதலோடு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதில் இருந்து இதுவரை 56 லட்சம் அமெரிக்கர்கள் இதனை பயன்படுத்தி கருக்கலைப்புகளை செய்து உள்ளனர் என உணவு மற்றும் மருந்து கழகம் மதிப்பீடு செய்து உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் கீழ் அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்துகளை பெறுவதற்கு கீழ் கோர்ட்டு விதித்திருந்த கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்து, சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக நீட்டிப்பு செய்து உள்ளது.

அதிபர் பைடன்

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு பற்றி அதிபர் பைடன் கூறும்போது, கீழ் கோர்ட்டின் முடிவுகள், உணவு மற்றும் மருந்து கழகத்தின் மருத்துவ நடைமுறைகளை முடக்கி, பெண்களின் சுகாதார விசயங்களை ஆபத்தில் தள்ளியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தடை உத்தரவால், மைப்பிரிஸ்டோன் மருந்துகள் தொடர்ந்து கிடைக்கும். கோர்ட்டில் நாங்கள் தொடர்ந்து வழக்கை எதிர்கொண்டு வரும்போதும், பாதுகாப்பு மற்றும் திறன் வாய்ந்த பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பெண்களின் சுகாதாரத்தில் அரசியல் நோக்கோடு நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிரக நான் தொடர்ந்து போராடுவேன் என்று கூறியுள்ளார்.

பயன்பாடு

குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய இந்த கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்துவது என்பது எளிது. வீட்டில் இருந்தபடியே உபயோகப்படுத்தி கொள்ளலாம். மருத்துவ உதவி எதுவும் தேவைப்படாது. பிற மாத்திரைகளை விட இது வேறுபட்டு உள்ளது. பாலியல் உறவுக்கு பின்னர், கர்ப்பம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக, பிற மாத்திரைகளை உடனடியாக பெண்கள் எடுக்கின்றனர்.

ஆனால் இந்த மாத்திரையானது, பெண் கர்ப்பிணி என்பது உறுதியானதும் கருக்கலைப்பு நடைபெறுவதற்கான விசயங்களை தூண்டுகிறது. உண்மையில் இதனுடன் கூடுதலாக ஒரு மருந்தும் எடுத்து கொள்ள வேண்டும்.

முதலில், மைப்பிரிஸ்டோன் ஆனது புரோஜெஸ்டிரோன் எனற ஹார்மோன் உற்பத்தியை தடுக்கிறது. அதற்கு 48 மணிநேரத்திற்கு பின் எடுத்து கொள்ளும் மிசோபுரோஸ்டால் மருந்து, ரத்தபோக்கு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி பெண்ணின் கருப்பை முழுவதும் காலி செய்கிறது.

இந்த மைப்பிரிஸ்டோன் மற்றும் மிசோபுரோஸ்டால் மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை (எப்.டி.ஏ.) 2000-ம் ஆண்டில் அனுமதி வழங்கியது. 10 வார கர்ப்பத்திற்குள் மாத்திரைகளை எடுத்து கொள்ளும்போது, அது வெற்றியடைகிறது.


Next Story