என்ஜிஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை: தலிபான் அரசு அதிர்ச்சி உத்தரவு..!!


என்ஜிஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை: தலிபான் அரசு அதிர்ச்சி உத்தரவு..!!
x

Image Courtacy: AFP

என்ஜிஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்தனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் இந்த தடைக்கு எதிராக மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. போராட்டம் பல இடங்களில் நடைபெறுவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும் (என்ஜிஓ), பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என்று தலிபான் அரசாங்கம் இன்று அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பொருளாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்ரஹ்மான் ஹபீப் உறுதிப்படுத்தியுள்ள கடிதத்தில், பெண்களுக்கான இஸ்லாமிய ஆடைக் குறியீடு குறித்த நிர்வாகத்தின் விளக்கத்தை சிலர் கடைப்பிடிக்காததால், மறு அறிவிப்பு வரும் வரை பெண் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு ஆப்கானிஸ்தானில் அதிக அளவில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்குப் பொருந்துமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

1 More update

Next Story