உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்


உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்
x

போர் நடந்து வரும் உக்ரைனுக்கு பிரான்ஸ் ஆயுதங்களை வழங்குவதை கண்டித்து அந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

வாரி வழங்கும் நாடுகள்

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது. ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் பிற உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.போர் முடிவில்லாமல் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என சர்வதேச அளவில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு

இந்த நிலையில் உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் பல நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி மக்கள் போராட தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் பிரான்சில் நேற்று தலைநகர் பாரீஸ் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடினா். குறிப்பாக பாரீசில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதி பேரணி நடத்தினர்.

மூன்றாம் உலகப்போருக்கு...

அவர்கள் பிரான்ஸ் மற்றும் உக்ரைன் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியும், 'போர் வேண்டாம், அமைதி வேண்டும்', 'மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வேண்டாம்' 'நேட்டோவை விட்டு வெளியேறு' போன்ற வாசகங்கள் அடங்கி பாதகைகளை சுமந்தபடியும் பேரணியாக சென்றனர். இந்த அமைதி பேரணிக்கு அழைப்பு விடுத்த பிரான்சின் மூத்த அரசியல்வாதியான புளோரியன் பிலிப்பாட் கூறுகையில், "உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கும் ஆயுதங்கள் அனைவரையும் மூன்றாம் உலகப்போருக்கு நெருக்கமாக கொண்டு செல்லும். போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு" என்றார்.

ஜப்பானிலும் எதிர்ப்பு

இதனிடையே ஜப்பான் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக அந்த நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்று, பொதுமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் 76 சதவீதம் பேர் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கடுமையாக எதிர்ப்பதாக கருத்து தெரிவித்தனர். வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரித்தனர். அதே சமயம் உக்ரைனுக்கு பொதுஉதவிகள் வழங்கப்படுவதற்கு 66 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Next Story