'தினமும் ரூ. 32 கோடி இழக்கும்போது...' - ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து எலான் மஸ்க் டுவிட்...!

நேற்று ஒரேநாளில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்தது.
வாஷிங்டன்,
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார்.
மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை நேற்று ஒரேநாளில் பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில், டுவிட்டரில் பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை குறித்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டுவிட்டரில் ஊழியர்கள் குறைப்பு தொடர்பாக, துரதிஷ்டவசமாக நிறுவனம் ஒருநாளைக்கு 32 கோடி ரூபாயை இழக்கும்போது வேறுவழியில்லை. நிறுவனத்தை விட்டு வெளியேறும் அனைவருக்கும் 3 மாத ஊழியம் வழங்கப்படும், அது சட்டப்பூர்வமான அனுமதி அளவை விட 50 சதவிகிதம் அதிகம் ஆகும்' என்றார்.






