சர்வதேச மாணவர்களால் இங்கிலாந்தின் வளர்ச்சி பாதிப்பு; இந்திய வம்சாவளி மந்திரி சர்ச்சை பேச்சு


சர்வதேச மாணவர்களால் இங்கிலாந்தின் வளர்ச்சி பாதிப்பு; இந்திய வம்சாவளி மந்திரி சர்ச்சை பேச்சு
x

குறைந்த திறனுடைய அகதிகள், சர்வதேச மாணவர்களால் இங்கிலாந்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது என்ற இந்திய வம்சாவளி பெண் மந்திரியின் பேச்சு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.



லண்டன்,


இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் இந்து பெண்ணான உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர் பிரேவர்மென்.

இந்நிலையில், தி சன் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியொன்றில், இங்கிலாந்து நாட்டில் குறைந்த திறனுடைய அகதிகள், சர்வதேச மாணவர்கள் ஆகியோர் அதிக அளவில் உள்ளனர். இவர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைந்து உள்ளது.

இந்த சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் வருகை தருவதுடன், அவர்கள் தங்களை சார்ந்து உள்ளனர். இதனால், அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அல்லது குறைவான திறன் கொண்ட வேலையில் ஈடுபடுகின்றனர். தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் பங்காற்றுவதும் இல்லை என கூறியுள்ளார்.

அதனால், இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க, புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கவும் மற்றும் குடியுரிமை கொள்கையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்சின் அரசில் உள்ள அனைத்து மூத்த மந்திரிகளும் புலம்பெயர்வோரை குறைக்கும் தங்களது நோக்கங்களை பகிர்ந்து கொண்டனர் என்றும் பிரேவர்மேன் கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு வேலை தேடி செல்வது பாதிக்கப்பட கூடிய சூழலும் ஏற்பட்டு உள்ளது.


Next Story