இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழக்கை கவனித்து வருகிறோம் - அமெரிக்கா

இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழக்கை கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழக்கை கவனித்து வருகிறோம் - அமெரிக்கா
Published on

வாஷிங்டன்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு 'அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 24-ம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதேவேளை, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ராகுல்காந்திக்கு அவகாசம் வழங்கி 30 நாட்கள் ஜாமினும் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மரியாதை அளிப்பது எந்த ஜனநாயகத்திற்கும் அடிப்படை. இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழங்கை நாங்கள் கவனித்து வருகிறோம்.

கருத்துச் சுதந்திரம் உள்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்த உறுதிப்பாட்டை இந்திய அரசுடன் நாங்கள் பரிர்கிறோம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com