'கெஜ்ரிவால் விவகாரத்தில் நியாயமான, வெளிப்படையான விசாரணை வேண்டும்' - அமெரிக்கா பரபரப்பு கருத்து

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது தொடர்பான நடவடிக்கைகளை கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
'கெஜ்ரிவால் விவகாரத்தில் நியாயமான, வெளிப்படையான விசாரணை வேண்டும்' - அமெரிக்கா பரபரப்பு கருத்து
Published on

வாஷிங்டன்,

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். தொடர்ந்து 22-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலை 6 நாட்கள்(வரும் 28-ந்தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கெஜ்ரிவால் கைது விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான கேள்விக்கு அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில், "கெஜ்ரிவால் கைது தொடர்பான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு கவனித்து வருகிறது. இந்த வழக்கில் நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதையும், சிறையில் உள்ள டெல்லி முதல்-மந்திரிக்கு சரியான நேரத்தில் சட்ட உதவி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கெஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என்று கருதுவதாக ஜெர்மனி அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக கூறி ஜெர்மனி அரசுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com