அணு ஆயுதங்களை கொண்டு பதிலடி தருவோம்: அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்


அணு ஆயுதங்களை கொண்டு பதிலடி தருவோம்: அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்
x

தொடர் மிரட்டல்களுக்கு அணு ஆயுதங்களை கொண்டு பதிலடி தருவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சூளுரைத்து உள்ளார்.



பியாங்யாங்,


அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர் அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில், சுமார் 15 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நேற்று நடத்தியது. இதனை தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தி இருந்தது.

கிழக்கு கடலை நோக்கிய இந்த சோதனையானது, அமெரிக்க எல்லையை தொடும் அளவு திறன் கொண்டது என்று ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2 நாட்களில் 2-வது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனையை நேற்று நடத்திய நிலையில், கிம் ஜாங் இன்று கூறும்போது, அணு ஆயுத மிரட்டல்களை, அணு ஆயுதங்களை கொண்டே உறுதியுடன் எதிர்கொண்டு பதிலடி தருவோம். போரை கொண்டே ஒட்டுமொத்த போரை எதிர்கொள்வோம் என தெரிவித்து உள்ளார்.

தொடர் மிரட்டல்களுக்கு அணு ஆயுதங்களை கொண்டு வடகொரியா பதிலடி தரும் என அவர் சூளுரைத்து உள்ளார். நேற்று நடத்திய ஏவுகணை பரிசோதனையை தனது மனைவி மற்றும் மகளுடன் தளத்தில் நின்றபடி கிம் பார்வையிட்டார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அச்சுறுத்தல்கள், ஒரு பகைமை கொள்கையை தொடருவது ஆகியன, அணு ஆயுத தடையை எதிர்த்து பெரிய அளவில் சோதனை செய்ய தனது நாட்டை தூண்டியது என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story