கொரோனா தொடர்பான தரவுகளைப் பகிருங்கள் - சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை..!!


கொரோனா தொடர்பான தரவுகளைப் பகிருங்கள் - சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை..!!
x

கொரோனா தொடர்பான தரவுகளைப் பகிருமாறு சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவா,

கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை உலகையே புரட்டிப் போட்ட கொரோனா பெருந்தொற்று, கடந்த 6 மாதங்களாக சற்று அடங்கியிருந்தது. இதனால் உலக மக்களும் கொரோனா அச்சத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தனர்.

இந்நிலையில் உலக நாடுகளிடம் இருந்து சற்று விலகி இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் மிக வீரியமாக பரவ தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் உருவானதாக குற்றம்சாட்டப்படும் சீனாவில்தான் இப்போது அதிவேகமாக பாதிப்பு இருந்து வருகிறது. சீனாவில் கொரோனா மரணங்கள் முன்னெப்போதையும் விட மிக அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் கொரோனா தொடர்பான தரவுகளைப் பகிருமாறு சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், "கொரோனாவுக்குப் பிந்தைய நிலை பற்றிய நமது புரிதலில் உள்ள இடைவெளிகள், நோய்த்தொற்றின் நீண்டகால விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு சிறந்த முறையில் சிகிச்சையளிப்பது என்பது எங்களுக்குப் புரியவில்லை. இந்த தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பது பற்றிய நமது புரிதலில் உள்ள இடைவெளிகள் எதிர்கால தொற்றுநோயைத் தடுக்கும் நமது திறமைக்கும் சவாலாக உள்ளன.

"நாங்கள் கோரிய தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், நாங்கள் கோரிய ஆய்வுகளை நடத்தவும் சீனாவைத் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம். நான் ஏற்கனவே பலமுறை கூறியது போல், இந்த தொற்றுநோயின் தோற்றம் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளன.

நாடு முழுவதும் அதிக ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் சீனாவை ஆதரிக்கிறது, மேலும் மருத்துவ பராமரிப்பு மற்றும் அதன் சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கு நாங்கள் தொடர்ந்து எங்கள் ஆதரவை வழங்குகிறோம்" என்று அவர் கூறினார்.

இதனிடையே சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 More update

Next Story