நியூசிலாந்து பிரதமராகிறார் கிறிஸ் ஹிப்கின்ஸ்


நியூசிலாந்து பிரதமராகிறார் கிறிஸ் ஹிப்கின்ஸ்
x

நியூசிலாந்தின் பெண் பிரதமர் ஜெசிந்தா தனது ராஜினாமாவை அறிவித்ததை தொடர்ந்து, அவரது அரசில் கல்வி மந்திரியாக இருந்து வரும் கிறிஸ் ஹிப்கின்ஸ் அந்த நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.

திடீர் ராஜினாமா

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டன் (வயது 42). தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற ஜெசிந்தா, கொரோனா வைரஸ் தொற்று போன்ற நெருக்கடியான காலத்தில் நாட்டை சிறப்பாக வழி நடத்தி சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் ஜெசிந்தா, தனது ராஜினாமாவை அறிவித்து அதிரவைத்தார். வருகிற அக்டோபர் மாதம் நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அடுத்த மாதம் (பிப்ரவரி) பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதாக ஜெசிந்தா கூறினார்.

கல்வி மந்திரி

ஜெசிந்தாவின் இந்த அறிவிப்பு அந்த நாட்டின் அரசியல் அரங்கை அதிரவைத்த நிலையில் நியூசிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? என்கிற கேள்வில் எழுந்தது.

இந்த நிலையில் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ளது. நியூசிலாந்தை பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே அந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

தலைவர் பதவிக்கான போட்டியில் ஜெசிந்தாவின் மந்திரி சபையில் காவல்துறை, கல்வி மற்றும் பொது சேவைத்துறையின் மந்திரியாக இருந்து வரும் கிறிஸ் ஹிப்கின்ஸ் (வயது 44) மட்டுமே களம் இறங்கி உள்ளார். இதனால் அவர் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராக நியமிக்கப்படுவார்

அதே சமயம் அவர் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் தொழிலாளர் கட்சியால் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அப்படி அவர் தொழிலாளர் கட்சி எம்.பி.க்களின் ஆதரவை பெற்று, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், ஜெசிந்தா தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஜெனரலிடம் முறைப்படி வழங்குவார். அதன் பின்னர் கவர்னர் ஜெனரல், கிறிஸ் ஹிப்கின்சை புதிய பிரதமராக நியமிப்பார்.

அக்டோபரில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் ஹிப்கின்ஸ் எவ்வளவு காலம் பதவியில் இருப்பார் என்பது நிச்சயமற்றது.

பாராட்டுகளை பெற்றவர்

ஏனெனில் அக்டோபரில் நடைபெறும் தேர்தலில் தொழிலாளர் கட்சி தோற்கடிக்கப்பட்டால் ஹிப்கின்ஸ் வெறும் 8 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருப்பார்.

அதேசமயம் ஹிப்கின்ஸ் கடந்த 2020 முதல் 2022 வரை 2 ஆண்டுகள் கொரோனா தடுப்புக்கான சிறப்பு மந்திரியாக பணியாற்றி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றவர் என்பதால் அவரது தலைமையில் தொழிலாளர் கட்சி தேர்தலில் எளிதில் வெற்றிப்பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


Next Story