நிலவில் விவசாயம் செய்வோமா...? - விஞ்ஞானிகள் தந்த ஆச்சர்ய தகவல்


நிலவில் விவசாயம் செய்வோமா...? - விஞ்ஞானிகள் தந்த ஆச்சர்ய தகவல்
x
தினத்தந்தி 7 Oct 2022 11:21 AM GMT (Updated: 7 Oct 2022 11:32 AM GMT)

நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் போய் நிலாவுக்கே சென்று சோறு சாப்பிடும் அளவிற்கு இன்றைய விஞ்ஞானம் நாளுக்குநாள் உச்சம் பெற்று வருகிறது.

வாஷிங்டன்,

மனிதன் நிலாவில் காலடி வைத்து சரித்திரம் படைத்து சுமார் 49 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால், இதுவரையில் நிலாவில் குடியிருப்புகளை நிறுவும் மனிதனின் ஆசை மட்டும் ஈடேறவில்லை! நிலாவுக்கு இதுவரை பல்வேறு விண்கலங்கள் செலுத்தப்பட்டு, பல்வேறு வகையான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் போய் நிலாவுக்கே சென்று சோறு சாப்பிடும் அளவிற்கு இன்றைய விஞ்ஞான உலகம் நாளுக்குநாள் உச்சம் பெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டிலும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா மும்முரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், 2025ம் ஆண்டிற்குள் நிலாவில் தாவரங்களை வளர்க்க ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். இஸ்ரேலின் பெரேஷீட் 2 விண்கலம் மூலம் விதைகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தாவர உயிரியலாளர் பிரட் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

நிலவில் விதைகள் தரையிறக்கப்பட்டதும் சீல் செய்யப்பட்ட அறைக்குள் அவை வளர்க்கப்பட உள்ளன. நிலவில் நிலவும் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு விதைகள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், இந்த திட்டம் உணவு, மருந்து மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதற்கான ஆரம்ப நிலை என்றும், நிலவில் மனிதன் தன் வாழ்க்கையைத் துவங்குவதற்கான முதல் முயற்சி எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story