

திருவாரூர்:
தமிழகத்திலேயே சரஸ்வதிக்கு என தனி கோவில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சாரதா நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சரஸ்வதி பூஜை விழாவையொட்டி சரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சரஸ்வதி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணி அளவில் பாத தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சரஸ்வதி அம்மனை தரிசித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து நாளை (5-ந் தேதி) விஜயதசமி அன்று பால வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 'அ' எழுத பழகி தங்களுடைய கல்வியை தொடங்குவதற்கான பூஜைகள் நடைபெறும்.
விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா மற்றும் பேரளம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறங்காவலர் குழுவினர் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.