நவக்கிரக தானியத்தின் பலன்கள்


நவக்கிரக தானியத்தின் பலன்கள்
x

நவதானியங்கள் அந்த ஒன்பது கிரகங்களுக்கும் உகந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு தானியம் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரியன்: சூரிய பகவானுக்கு உரிய தானியம், கோதுமை. இதன் மாவில் சுண்டலோ அல்லது ஏதாவது ஒரு உணவோ செய்து சூரியனுக்கு படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

சந்திரன்: சந்திர பகவானுக்கு உரிய தானியம், நெல். அரிசியால் தயாரித்த உணவை படைத்து இவரை வணங்கினால், சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது.

செவ்வாய்: செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம், துவரை. இதனை படைத்து செவ்வாய் எனப்படும் அங்காரகனை வணங்கினால், விபத்துக்கள் தவிர்க்கப்படும். திருமணத் தடை நீங்கும். சொத்து சேரும்.

புதன்:புதனுக்குரியது பச்சை பயிறு. இந்த தானியத்தை வைத்து புதன் பகவானை வணங்க வேண்டும். இதனால் கல்வியில் ஏற்படும் தடை நீங்கும். பேச்சாற்றல் அதிகரிக்கும். வணிகத்தில் வெற்றி பெறலாம். ஜோதிட கலையில் புகழ் பெறலாம்.

குரு: குரு பகவானுக்கு உரியது, கொண்டைக் கடலை. இதனை மாலையாகக் கோர்த்து, வியாழ பகவானுக்கு படைத்து வழிபாடு செய்து வந்தால், இல்லத்தில் சுப காரியங்கள் விரைவாக நடைபெறும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

சுக்ரன்: சுக்ர பகவானுக்கு உரிய தானியம், மொச்சை. இதனை பச்சையாகவோ, வேக வைத்தோ சுக்ர பகவானுக்கு படைத்து வழிபடலாம். இவ்வாறு செய்வதால் கலைகளில் வித்தகராகத் திகழ்வீர்கள்.

சனி: சனி பகவானுக்குரியது, கருப்பு எள். இதனை ஒரு வெள்ளைத் துணியில் வைத்து நவக்கிரக சன்னிதியில் தீபமேற்றலாம். அல்லது எள் சாதம் செய்து தானம் வழங்கலாம். இதனால் எதிர்வரும் தடைகள் அகலும். பகை விலகும். துன்பங்கள் நீங்கும். பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்பு உண்டாகும்.

ராகு: ராகு பகவானுக்கு உரியது உளுந்து. இதனைப் படைத்து ராகு பகவானை வணங்கி வந்தால், நாக தோஷம் நீங்கும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்க்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக மாற்றும் சக்தி ராகு பகவானுக்கு உண்டு.

கேது: கேது பகவானுக்குரியது கொள்ளு. இதனைப் படைத்து கேதுவை வழிபட்டு வந்தால், நம்மை வாட்டி வதைத்த நோய்நீங்கும். மருத்துவ செலவு குறையும். மனதில் உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழிபிறக்கும்.


Next Story