

பரத்வாஜ முனிவர் தலயாத்திரை சென்றபோது நர்மதை நதியில் நீராடினார். அங்கே ஒரு கந்தர்வ மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. செந்நிறம் கொண்டிருந்ததால் "அங்காகரன்" என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் "பூமி குமாரன்" என்ற பெயரும் உண்டு.
அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர். அவருடைய பக்தித் திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் பெற்றார். அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.