சிவகிரி அருகே கோவில் பூஜையில் வைக்கப்பட்டஒரு எலுமிச்சை பழம் ரூ.10 ஆயிரத்துக்கு ஏலம்
சிவகிரி அருகே கோவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.10 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
சிவகிரி, ஏப்.15-
சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் சடையப்பசாமி கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள், உப்பு பாக்கெட், மஞ்சள் ஆகியவை ஏலம் விடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஏலம் கூறி எடுத்து சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள திட்டுப்பாறையை சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் ஒரு எலுமிச்சை பழத்தை ரூ.10 ஆயிரம் ஏலம் கூறி வாங்கிச் சென்றார். 2-வதாக மற்றொரு எலுமிச்சை பழத்தை கந்தசாமிபாளையம் அருகே உள்ள அருவாப்பளிகாடு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் ரூ.2 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். 3-வதாக இன்னொரு எலுமிச்சை பழம் கந்தசாமிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரால் ரூ.1,800-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஒரு கிலோ உப்பு பாக்கெட்டை கந்தசாமிபாளையத்தை சேர்ந்த தாண்டிஸ்வரன் ரூ.2 ஆயிரத்து 6-க்கும், அதே ஊரை சேர்ந்த தேவராஜ் என்பவர் 50 கிராம் மஞ்சள் பொடி பாக்கெட்டை ரூ.1,500-க்கும் ஏலம் எடுத்தார்.