நன்மைகளை வாரி வழங்கும் ராமநவமி


நன்மைகளை வாரி வழங்கும் ராமநவமி
x

ராமநவமி தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.

திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராமாவதாரம். இறைவன் தனது தெய்வீக சக்திகளைத் துறந்து சாதாரண மனிதனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் இது. திருமால் மூன்று முறை மனிதனாக அவதரித்திருக்கிறார். அவை வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் ஆகியவை. இவற்றில் வாமன அவதாரத்திலும், கிருஷ்ண அவதாரத்திலும் அவர் தன்னுடைய இறைத் தன்மையை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் ராமாவதாரத்தில் மட்டுமே, அடுத்தது என்ன நடக்கும் என்று அறியாதவரைப் போல் எளிய மனிதனின் வாழ்வை வாழ்ந்திருப்பார். அதனால்தான் ராமாவதாரம் சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது.

அயோத்தி தேசத்தை தசரதன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். திசைகளை எண் திசைகளாக பிரிப்பார்கள். அதோடு கீழ் திசை, மேல் திசை ஆகியவற்றையும் சேர்த்து மொத்தம் 10 திசைகள் உள்ளன. அந்த 10 திசைகளிலும் திறம்பட ரதத்தை செலுத்தும் ஆற்றல் பெற்றவன் என்பதால், அவருக்கு 'தசரதன்' என்ற பெயர் வந்தது. தசரத மன்னனுக்கு கோசலை, சுமித்ரை, கைகேயி என மூன்று மனைவிகள். உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டிய தசரதனுக்கு, நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லாதது பெரும் கவலையைத் தந்தது.

குழந்தைச் செல்வம் கிடைக்க என்ன செய்யலாம் என்று, தனது குல குருவான வசிஷ்டரிடம், தசரதன் ஆலோசனை கேட்டார். அதற்கு வசிஷ்டர், 'புத்திர பாக்கியத்திற்கான யாகம் ஒன்றை செய்யலாம்' என்று தெரிவித்தார். அதன்படி தசரத மன்னன் யாகத்தைச் செய்தார். யாகத்தின் முடிவில் யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட யட்சன், பிரசாதம் நிறைந்த ஒரு கிண்ணத்தை தசரதனிடம் கொடுத்தான். அதனை தனது மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார் தசரதன். அதன் பயனாக அவர்கள் மூவரும் கர்ப்பம் தரித்தனர்.

கோசலை நவமி திதியில் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையே ராமபிரான். அதைத் தொடர்ந்து கைகேயிருக்கு பரதன் பிறந்தான். சுமித்திரைக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் லட்சுமணன், சத்ருக்ணன் ஆவர். பால்ய பருவத்திலேயே வில் வித்தையில் தேர்ந்தவராக மாறினார், ராமபிரான். அவரும் லட்சுமணனும், விஸ்வாமித்திர முனிவரின் அழைப்பை ஏற்று, காட்டிற்குச் சென்று தாடகை என்னும் அரக்கியை வதம் செய்தனர்.

பின்னர் மிதிலை நகருக்கு, ராமனையும் லட்சுமணனையும் அழைத்துச் சென்றார், விஸ்வாமித்திரர். அங்கு ஜனகரின் அரண்மனையில் யாராலும் நாண் ஏற்ற முடியாத சிவதனுசு இருந்தது. அந்த வில்லில் நாண் ஏற்றுபவர்களுக்கே, தன்னுடைய மகளான சீதையை மணம் முடித்துக் கொடுப்பது என்று ஜனகர் உறுதியாக இருந்தார். ஆனால் அதை தூக்கவே பல நாட்டு அரசர்களும் படாதபாடு பட்டனர். பிறகு எப்படி, வில்லில் நாணை ஏற்றுவது? ஆனால் விஸ்வாமித்திரர், 'சீதையை ராமனுக்கு மணம் முடித்துக் கொடுங்கள்' என்று கேட்டார். அப்போது தன்னுடைய உறுதியைப் பற்றி விஸ்வாமித்திரரிடம் ஜனகர் தெரிவித்தார்.

இதையடுத்து சிவதனுசில் ராமர் நாண் ஏற்ற முன்வந்தார். சாதாரணமாக அந்த வில்லைத் தூக்கிய ராமர், அதில் நாண் ஏற்ற முற்படுகையில், அவரது வலிமை தாங்காமல், வில் இரண்டாக முறிந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த ஜனகர், ராமனுக்கே தன்னுடைய மகள் சீதையை மணம் முடித்துக் கொடுத்தார்.

இதற்கிடையில் தசரத மன்னன், ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்தார். ஆனால் மந்தாரையின் சூழ்ச்சியால் கைகேயி மனம் குழம்பி, தன்னுடைய மகன் பரதனுக்குத்தான் முடி சூட்ட வேண்டும் என்றும், ராமன் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும், தசரதனிடம் வரம் பெற்றாள். ராமனுடன், சீதையும், லட்சுமணனும் காட்டிற்குச் சென்றனர். வழியில் ராமனின் காலடி பட்டு, பல ஆண்டுகளாக கல்லாக இருந்த கவுதம முனிவரின் மனைவி அகலிகை, பெண்ணாக உருமாறினாள்.

இந்த நிலையில் தன்னுடைய தங்கை சூர்ப்பணகையை துன்புறுத்திய காரணத்திற்காக, ராமனை பழிவாங்கும் நோக்கில், சீதையை கடத்திச் சென்றான், ராவணன். இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக, சுக்ரீவனின் உதவியை நாடினார், ராமபிரான். மேலும் சுக்ரீவன் படையைத் திரட்டுவதற்காக, அவனது சகோதரரான வாலியை ராமர் வதம் செய்தார். பின்னர் சுக்ரீவனின் படையுடன், அனுமன் உள்ளிட்ட வானர வீரர்களுடன் இலங்கைச் சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை மீட்டார்.

பின்னர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அவர் அயோத்தி திரும்பியதும், மீண்டும் அரச பட்டத்தை ஏற்றார். அதுவரை 14 ஆண்டுகளாக தன்னுடைய அண்ணன் ராமனின் பாதுகையை அரியணையில் வைத்து ஆட்சி செய்து வந்தான், பரதன். ராமனைக் காட்டிலும் ராம நாமமே உயர்ந்தது என்பார்கள் ஆன்மிகப் பெரியோர். ராம நாமத்தை உச்சரித்தால் ராமனின் ஆசியோடு, அவரது பக்தனான அனுமனின் ஆசியையும் பெறலாம். ராமநவமி நாளில் ராமபிரானை வழிபட்டால் நன்மைகள் பலவும் வந்து சேரும்.

விரதம் இருப்பது எப்படி?

ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.

அன்றைய தினம் ராமர் கோவில் களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.

குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.

ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.


Next Story