ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது - 6-ந் தேதி தேரோட்டம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது - 6-ந் தேதி தேரோட்டம்
x

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 6-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலையில் பேரிதாடனம் நடைபெற்றது. இதையடுத்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து, இரவில் சந்தனு மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவில் யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

விழாவின் 2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) மாலை கற்பக விருட்சம் வாகனத்திலும், நாளை(செவ்வாய்க்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 1-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 2-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதியில் உலா வருகிறார்.

4-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ந்தேதி காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும், மாலை தங்கக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 8-ந் தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story