வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழா:பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்


வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழா:பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்
x

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

ஈரோடு

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

திருவிழா

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவிலின் முன்பு கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து தினமும் பெண்கள், கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் முகத்திலும், முதுகிலும் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும், பெண் பக்தர்கள் பலர் தங்களது கைகளில் அக்னி சட்டி எடுத்து வந்தார்கள்.

முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி எடுத்து கொண்டு ஏராளமான பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தார்கள். இதேபோல் பக்தர்கள் புனிதநீர் எடுத்து கொண்டும் ஊர்வலமாக சென்றார்கள். மேலும் பல்வேறு இடங்களில் ஒலி பெருக்கி மூலமாக ஆன்மிக பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டார்கள். இதனால் வீரப்பன்சத்திரம் பகுதி விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 4-ந் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 5-ந் தேதி காலை 7 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனின் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. 6-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


Related Tags :
Next Story