எமதர்மனுக்கு அமைந்த தனிக் கோவில்


எமதர்மனுக்கு அமைந்த தனிக் கோவில்
x

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் என்ற கிராமத்தில் எமதர்மராஜனுக்காக ஒரு ஆலயம் அமைந்திருக்கிறது.

பொதுவாக ஒரு சில ஆலயங்களில் மட்டுமே, எமனுக்கு சிறிய அளவிலான சன்னிதிகள் இருக்கும். ஆனால் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் எமதர்மராஜனுக்காக மட்டுமே இந்த தனிக் கோவிலை அமைத்திருக்கிறார்கள். இந்த ஆலயத்தில் 6 அடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன் பாசக்கயிறு மற்றும் ஓலைச்சுவடி, கதையை தாங்கியபடி கம்பீரமாக எமதர்மராஜன் அருள்பாலிக்கிறார்.

தலவரலாறு

ஒருமுறை பிரகதாம்பாள் என்ற திருநாமத்துடன் அவதரித்த பார்வதிதேவியை, சிறு குழந்தையாக எமதர்மனிடம் வழங்கினார், சிவபெருமான். அந்தக் குழந்தையை பூமிக்கு அழைத்துச் சென்று, பெரியவளாக வளர்ந்ததும் சிவபெருமானுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது ஈசனின் கட்டளையாகும். அதன்படி பூமிக்கு வந்து சேர்ந்தார் எமதர்மன். வருடங்கள் பல கடந்தது. பிரகதாம்பாள், பருவ வயதை எட்டியதும், அவளை சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் முடிவு செய்தனர்.

ஆனால் அந்த நேரத்தில் சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இதனால் மன்மதனை அழைத்து வந்து, சிவபெருமானின் தியானத்தை கலைக்கும்படி செய்தனர். கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான், நெற்றிக்கண்ணை திறந்து, மன்மதனை அழித்தார். மன்மதன் இறந்து போனால் உலக உயிர்கள் காதல் வயப்பட்டு இயங்காமல் போய்விடும் என்பதால், மன்மதனை உயிர்ப்பிக்கும்படி ரதிதேவி வேண்டினாள். ஆனால் ஈசனோ, "இறந்தவர்கள் உயிர்பெறுவதில்லை. இருப்பினும் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்காக நடத்தப்படும் திருவிழாவின் போது, உன்னுடைய கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான்" என்று கூறியருளினார்.

சிவபெருமானின் ஆனைப்படி, மன்மதனின் உயிரைப் பறிப்பதற்காக எமதர்மராஜன் வந்து இறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம் என்று இந்த ஆலயத்தின் தல புராணக் கதை சொல்கிறது.

இந்த ஆலயத்தில் தினமும் எமகண்ட நேரத்தில், எமதர்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. எமதர்மனை இங்கு வழிபடும் பக்தர்கள், நேருக்கு நேராக நின்று வணங்குவதில்லை என்கிறார்கள். பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ப எழுதப்பட்ட கணக்குப்படி, தன்னுடைய நீதியை வழங்கும் இத்தல எமதர்மனையும் ஒரு நீதிபதியாகவே கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

இவரை வணங்கினால், நமக்கான நீதி உடனடியாக கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். இந்தப் பகுதியில் நடைபெறும் திருமணம், வளைகாப்பு போன்ற எந்த மங்கல நிகழ்வாக இருந்தாலும், அதற்கான பத்திரிகையை, எமதர்மனின் காலடியில் சமர்ப்பித்து வழிபட்டு வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆலயத்தில் 'படி கட்டுதல்' என்ற வழிபாடு பிரசித்தம். நியாயமாக சம்பாதித்து காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்க, அதுபற்றி ஒரு பேப்பரில் எழுதி, எமதர்மனை பூஜித்து இங்குள்ள சூலத்தில் கட்டி விடுகிறார்கள். விரைவிலேயே அதற்கான பலனை அந்த மக்கள் அனுபவிப்பதாகவும் சொல்லப்படுகிறது. நீண்ட ஆயுள் கிடைக்க, மரண பயம் நீங்க, திருமணத் தடை அகல என்று இங்கே வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அதே போல் மாசி மாதத்திலும் மன்மதனுக்கு திருவிழா எடுக்கிறார்கள். எமதர்மராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.

அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம் திருத்தலம்.


Next Story