2-வது 20 ஓவர் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?


2-வது 20 ஓவர் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
x

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி 2-வது 20 ஓவர் போட்டியில் இன்று களம் இறங்குகிறது.

நாக்பூர்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா (71 ரன்), லோகேஷ் ராகுல் (55 ரன்), சூர்யகுமார் யாதவ் (46 ரன்) ஆகியோரின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. ஆனால் பந்து வீச்சு தான் ஒட்டுமொத்தமாக சோடை போனது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும் (4 ஓவரில் 52 ரன்), ஹர்ஷல் பட்டேலும் (4 ஓவரில் 49 ரன்) இறுதிகட்டத்தில் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு வித்திட்டது.

இந்த விஷயத்தில் அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று நம்பலாம். முதுகுவலி பாதிப்பில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழு உடல்தகுதியை எட்டாததால் கடந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவர் இல்லாதது பந்துவீச்சு பலவீனத்தை காட்டியது.

இது குறித்து நேற்று பேட்டி அளித்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், 'பும்ராவின் உடல்தகுதி குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அவர் போட்டிக்கு தயாராக இருக்கிறார்' என்றார். இதன் மூலம் பும்ரா இன்றைய ஆட்டத்தில் களம் காணுவார் என்று தெரிகிறது.

சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து தொடர்ந்து சொதப்புகிறார். ஆனாலும் அவருக்கு இடைவிடாது வாய்ப்பு வழங்கப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. அவருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்படுவாரா என்பது போட்டிக்கு முன்பாகத் தான் தெரியும். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படலாம்.

மைதானம் எப்படி?

ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆவலில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் கேமரூன் கிரீனும் (61 ரன்), மேத்யூ வேட்டும் (45 ரன்) இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளினர். அதே உத்வேகத்துடன் 2-வது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் காத்திருக்கிறார்கள். அதே சமயம் உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் களம் காணும் இந்திய அணி பதிலடி கொடுக்க வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

நாக்பூர் ஆடுகளம், மொகாலியுடன் ஒப்பிடும் போது வித்தியாசமானது. இது மெதுவான தன்மை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பந்து வீச்சாளர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும்.

இந்த மைதானத்தில் இதுவரை 12 இருபது ஓவர்போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 4 ஆட்டங்களில் ஆடி அவற்றில் 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல் அல்லது அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் அல்லது பும்ரா அல்லது தீபக் சாஹர்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் ஒயிட், மேத்யூ வேட், கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா.


Next Story