ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: இந்தியா-மலேசியா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது..!

ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா-மலேசியா அணிகளுக்கு இடையிலான முதல் காலிறுதி போட்டி மழையால் கைவிடப்பட்டது.
image courtesy: ICC twitter via ANI
image courtesy: ICC twitter via ANI
Published on

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன.

அந்த வகையில் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெண்கள் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி, மலேசியா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மலேசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 5.4 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா 47 ரன்களும் ரிச்சா கோஷ் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த நிலையில் 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மலேசியா அணி பேட்டிங்கை தொடங்கியது. இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையில் மலேசிய அணி 1 ரன் எடுத்தது. இதையடுத்து மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com