ஆசிய கோப்பை சர்ச்சை : ஜெய் ஷாவின் கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு


ஆசிய கோப்பை சர்ச்சை : ஜெய் ஷாவின் கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு
x

பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என தெரிவித்தார்

கராச்சி,

அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்று ஜெய் ஷா குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும், இதில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் ஜெய் ஷா கூறி இருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பையை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஜெய் ஷா நேற்று தெரிவித்த கருத்துகளை ஆச்சரியத்துடனும், ஏமாற்றமும் அளிக்கிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வாரியம் அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் எந்த விவாதமும் ஆலோசனையும் இல்லாமல், அவற்றின் நீண்டகால விளைவுகள் மற்றும் தாக்கங்கள் குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன"

இதுபோன்ற அறிக்கைகளின் ஒட்டுமொத்த தாக்கம் ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகங்களை பிளவுபடுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது, மேலும் 2023 ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி நிகழ்வுகளுக்கு பாகிஸ்தானின் இந்தியா வருகையை பாதிக்கலாம்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் அறிக்கை குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து இன்றுவரை அதிகாரப்பூர்வ தகவல் அல்லது விளக்கத்தை பெறவில்லை. எனவே, தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தனது வாரியத்தின் அவசர கூட்டத்தை நடைமுறையில் கூடிய விரைவில் கூட்ட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Next Story