முதல் டி20 போட்டியில் டக் அவுட்...சுப்மன் கில் மீது கோபத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா...!


முதல் டி20 போட்டியில் டக் அவுட்...சுப்மன் கில் மீது கோபத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா...!
x

image courtesy; AFP

தினத்தந்தி 12 Jan 2024 6:59 AM GMT (Updated: 12 Jan 2024 7:05 AM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

மொகாலி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் அடித்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்து அசத்தினார்.

முன்னதாக 14 மாதங்கள் கழித்து மீண்டும் டி20 அணிக்கு திரும்பியதால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது ரோகித் சர்மா அடித்த பந்தை கவனித்த கில் அது ஆப்கானிஸ்தான் பீல்டரின் கைகளில் சிக்கியதும் ஓடாமல் கிரீசுக்குள்ளேயே நின்றுவிட்டார். ஆனால் மறுமுனையில் ரோகித் சர்மா கில்லை கவனிக்காமல் ரன் எடுக்க ஓடினார். அவர் மீண்டும் கிரீசுக்குள் செல்லும் முன் ஆப்கானிஸ்தான் வீரர்களால் ரன் அவுட் செய்யப்பட்டார். வெறும் 2 பந்துகள் மட்டுமே சந்தித்த ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரோகித், சுப்மன் கில்லை திட்டியவாறே பெவிலியனுக்கு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story