ரஷிய சூதாட்டகாரர்களை ஏமாற்ற குஜராத்தில் நடந்த போலி ஐபிஎல் தொடர் - அதிர்ச்சி சம்பவம்


ரஷிய சூதாட்டகாரர்களை ஏமாற்ற குஜராத்தில் நடந்த போலி ஐபிஎல் தொடர் - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 11 July 2022 10:47 AM GMT (Updated: 11 July 2022 10:49 AM GMT)

பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் பேசுவதற்காக ஒருவரையும் நியமித்துள்ளனர்.

காந்திநகர்,

உலக கிரிக்கெட் அரங்கில் 20 ஓவர் போட்டியின் சுவாரசியத்தை அதிகரித்தததில் ஐபிஎல் தொடருக்கு எப்போதும் பெரிய பங்கு உண்டு. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இந்த ஐபிஎல் தொடரை குஜராத்தில் போலியாக நடத்திய கும்பல் சிக்கியுள்ளது.

ரஷிய சூதாட்ட நபர்களை ஏமாற்ற குஜராத் மாநிலத்தில் உள்ள மோலிபூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 21 பேர் போலி ஐபிஎல் தொடரை நடத்தியுள்ளனர். அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் ஜெர்சிகளை அணிந்து கொண்டு இந்த தொடரை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த மோசடியில் பின்னணியில் உள்ள நான்கு பேரை மெஹ்சானா மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. உண்மையான ஐபிஎல் விளையாட்டை போன்றே காண்பிப்பதற்காக இவர்கள் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் பேசுவதற்காக ஒருவரையும் நியமித்துள்ளனர்.

இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் என பெயரிடப்பட்ட இந்த போட்டிகள் யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. மேலும் அந்த மோசடி கும்பல் அமைத்த டெலிகிராம் சேனலில் ரஷ்ய சூதாட்டக்காரர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story