உலகக்கோப்பை தொடருக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி - பராஸ் மாம்ப்ரே


உலகக்கோப்பை தொடருக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி - பராஸ் மாம்ப்ரே
x

உலகக்கோப்பை தொடருக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார்.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. நாளை மறுதினம் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.

இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ராகுல், பும்ரா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே உலகக்கோப்பை தொடருக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ராவின் உடற்தகுதி முன்னேற்றத்தை தொடர்ந்து கவனித்து வந்தோம். அவரது உடற்தகுதி தொடர்பாக எங்களுக்கு கிடைத்த அறிக்கையால் மகிழ்ச்சி அடைந்தோம். தற்போது அணியில் தரமான 4 வேகப்பந்து வீச்சாளர்கள் (ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ்) உள்ளனர். எப்போதுமே தேர்வில் சில விருப்பங்கள் இருப்பது சிறந்தது தான்.

ஷமி போன்ற ஒருவரை நீக்குவது அவ்வளவு எளிதல்ல. அவருக்கு இருக்கும் அனுபவமும், நாட்டுக்காக அவர் வெளிப்படுத்தி உள்ள செயல்பாடும் அபாரமானது. ஒரு வீரரை வெளியேற்றுவது போன்ற உரையாடலை நிகழ்த்துவது ஒருபோதும் எளிதானது அல்ல.

ஆனால் வீரர்களுடனான உரையாடலில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், அவர்கள், எங்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். நாங்கள் எடுக்கும் எந்த முடிவையும் வீரர்கள் அறிவார்கள், அது அணியின் நன்மைக்காகவே இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஹர்திக் பாண்டியா தன்னை வடிவமைத்துக் கொண்ட விதத்தால் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக நாங்கள் நீண்ட காலமாக உழைத்தோம். நாங்கள் அவரது பணிச்சுமையை நிர்வகித்து வருகிறோம்.

அவர் உடற்தகுதியுடன் இருப்பதையும், அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பதை பெற முடியும் என்பதை உறுதியுடன் கூறமுடியும். ஹர்திக் பாண்டியா 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினால் வித்தியாசமான பந்து வீச்சாளராக இருப்பார். அணியின் கண்ணோட்டத்தில் அவர், விக்கெட் வீழ்த்தி திருப்பம் ஏற்படுத்தி கொடுப்பவராக திகழ்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story