ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் - ஹர்திக் பாண்ட்யா உருக்கமான கோரிக்கை


ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் - ஹர்திக் பாண்ட்யா உருக்கமான கோரிக்கை
x

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளன.

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

இந்த தொடர் முழுவதுமே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது.

இந்நிலையில் குழந்தையாக இருக்கும்போது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட நாம் நமக்காக மட்டுமல்லாமல் நம்முடைய ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தம்முடைய எக்ஸ் தளத்தில் அவர் வீடியோ பதிவில் பேசியுள்ளது பின்வருமாறு;- "இந்திய அணியை குறித்து இதற்கு மேல் நான் பெருமையாக இருந்திருக்க முடியாது. இதுவரை நாங்கள் செய்தவை அனைத்திற்கும் பின்னால், பல வருட கடின உழைப்பின் பெருமை இருக்கிறது. சிறு வயதிலிருந்தே நாம் கனவு கண்ட சிறந்த வாய்ப்பு ஒன்றை செய்வதிலிருந்து ஒரு படி தொலைவில் மட்டுமே இருக்கிறோம். கோப்பையை நமக்காக மட்டுமல்லாமல் நாம் பின்னே இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக வெல்ல வேண்டும். என்னுடைய இதயத்திலிருந்து எப்போதும் உங்களுக்கு அன்பு மற்றும் ஆதரவுடன் இருப்பேன். தற்போது கோப்பையை வீட்டுக்கு கொண்டு வாருங்கள். ஜெய்ஹிந்த்" என்று கூறியுள்ளார்.


Next Story