முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்..!


முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்..!
x
தினத்தந்தி 16 Dec 2023 9:45 PM GMT (Updated: 16 Dec 2023 9:45 PM GMT)

மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இளம் சிவப்பு (பிங்க்) நிற சீருடை அணிந்து களம் காண்கிறது.

ஜோகன்னஸ்பர்க்,

இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

2-வது ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. உடல் நல பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை கவனிக்கும் பொருட்டு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், கேப்டன் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.

மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இளம் சிவப்பு (பிங்க்) நிற சீருடை அணிந்து களம் காண்கிறது. ஸ்டேடியமும் பெரும்பாலும் 'பிங்க்' நிறத்தில் காட்சியளிக்கும். தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ரீஜா ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லரும், பந்து வீச்சில் லிசாத் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, பெலுக்வாயோ, கேஷவ் மகராஜூம் வலுசேர்க்கிறார்கள்.

அண்மையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் ஒருநாள் போட்டி தொடர் இதுவாகும். ஒருநாள் போட்டி அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முனைப்பில் உள்ள இந்தியா தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த தென் ஆப்பிரிக்கா வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 91 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 38-ல் இந்தியாவும், 50-ல் தென்ஆப்பிரிக்காவும் வென்றுள்ளன. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியா இதுவரை 8 ஒருநாள் போட்டியில் ஆடி 3-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது.

ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானது. எனவே இந்த போட்டியில் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.


Next Story