ஐபிஎல் மினிஏலம்: சென்னை அணி விடுவித்த வீரர்கள் பட்டியல் - முக்கிய வீரரை விடுவித்த மும்பை அணி..!


ஐபிஎல் மினிஏலம்: சென்னை அணி விடுவித்த வீரர்கள் பட்டியல் - முக்கிய வீரரை விடுவித்த மும்பை அணி..!
x

ஐபிஎல் மினிஏலம் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

ஐபிஎல் ஏலத்திற்காக மும்பை அணியில் இருந்து முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது.

பிசிசிஐ-ம் அதற்கேற்ற பணிகளை செய்து வருகின்றது. அதாவது 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தாங்கள் விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்பிக்க வேண்டும் என கூறியிருந்தது. அதற்கான வேலைகளை அணி நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. இந்நிலையில், ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தாங்கள் விடுவித்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி மும்பை அணியின் மிக முக்கியமான வீரர்களின் ஒருவரான வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கைரன் பொல்லார்ட்டை அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவருடன் சேர்த்து பெபியன் ஆலென், டைமல் மில்ஸ், ஹிரித்திக் செளகின், மயங்க் மார்க்கண்டே ஆகியோரையும் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை அணிக்காக பொல்லார்ட் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 முறை சாம்பியனான மும்பை அணி கடந்த சீசனில் 10-வது இடத்தை பிடித்து மோசமாக வெளியேறியது. இதில் பொல்லார்ட் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 144 ரன்களை மட்டுமே அடித்தார். மேலும் தனது கரியரில் மிக மோசமான சராசரியை ( 14.40 ) வைத்திருந்தார். பந்துவீச்சிலும் பொல்லார்ட் 6 இன்னிங்ஸ்களில் 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

மேலும், சென்னை அணியை பொறுத்தவரை ஜடேஜா அணியில் இருந்து விலக உள்ளார் என செய்திகள் வெளிவந்த நிலையில் அவரை அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளதாக தெரிகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா தொடரின் பாதியில் அப்பதவியில் இருந்து விலகினார். இதனால் சென்னை அணிக்கும் ஜடேஜாவுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் சென்னை அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துள்ளதாக தெரிகிறது.

சென்னை அணியில் இருந்து கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, மிட்செல் சாண்ட்னெர் ஆகியோரை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story