ஐபிஎல்-லில் இருந்து விலகுகிறாரா ரோகித்...? கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ் - காரணம் என்ன..?


ஐபிஎல்-லில் இருந்து விலகுகிறாரா ரோகித்...? கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ் - காரணம் என்ன..?
x

Image Courtesy : AFP / IPL

16-வது ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

மும்பை,

16-வது ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, குஜராத், ராஜஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ஐபிஎல் தொடரில் அதிகப்படியான கோப்பைகளை வென்ற மும்பை அணி கடந்த இரு சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாமல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், இந்த சீசனில் மீண்டும் பழைய பார்முக்கு வந்து வெற்றி கோப்பையை மும்பை கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால், தொடர் தொடங்குவதற்கு முன்னரே மும்பை அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகி உள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மும்பை ரசிகர்களுக்கு மேலும் கவலை அளிக்கும் விதமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷன் கிஷன் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்த பின்னர் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதேபோல் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் தொடரிச்சியாக 3 போட்டிகளில் டக் அவுட் ஆகி பார்ம் இன்றி தவித்து வருகிறார்.

இந்நிலையில், மும்பை ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் சில ஆட்டங்களில் ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடருக்கு பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற இருப்பதால் அதில் கலந்து கொள்ள முழு உடற்தகுதியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவ்வாறு ஐபிஎல்லில் சில ஆட்டங்களில் ரோகித் ஆட வில்லை என்றால் அந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



Next Story