ராஞ்சி டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்


ராஞ்சி டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்
x
தினத்தந்தி 23 Feb 2024 6:37 AM GMT (Updated: 23 Feb 2024 6:38 AM GMT)

இந்திய அணியின் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ராஞ்சி,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் வீசிய ஓவரில் ஜாக் கிராலி போல்டானார். அதனை இந்திய வீரர்கள் கொண்டாடியபோது, ரீப்ளேவில் ஆகாஷ் தீப், கிரீசை தாண்டி நோ பாலாக வீசியது தெரியவந்தது. இதனால் பெரிய கண்டத்தில் இருந்து ஜாக் கிராலி தப்பினார்.

இதையடுத்து ஒருசில பவுண்டரிகள் விளாசிய அவர், 42 ரன்களில் இருந்தபோது ஆகாஷ் தீப் ஓவரில் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றத்தில் உள்ளது.

பென் டக்கெட் (11), ஒல்லி போப் (0), ஸ்டோக்ஸ்(கேப்டன்) (3) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பேர்ஸ்டோவ் ஒருசில பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 24.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


Next Story