ரிஷப் பண்டின் காயங்கள் குணமடைய 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம் -மருத்துவர்கள்


ரிஷப் பண்டின் காயங்கள் குணமடைய 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம் -மருத்துவர்கள்
x
தினத்தந்தி 31 Dec 2022 6:02 AM GMT (Updated: 31 Dec 2022 6:14 AM GMT)

டாக்டர் கமர் ஆசம் கூறும் போது பண்ட் தசைநார் காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என கூறினார்

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.

டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இதில் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது.

இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது.

உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்தார். கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது.

காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரிஷப் பண்டை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் நெற்றி, முதுகு மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக பண்ட் டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பப்படலாம் என் அகூறப்படுகிறது.

மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் "பண்டுக்கு நெற்றியில் இரண்டு வெட்டுகள், வலது முழங்காலில் தசைநார் கிழிந்து உள்லது. வலது மணிக்கட்டில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கணுக்கால், கால் மற்றும் முதுகு பகுதியி சிராய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன என கூறி உள்ளது.

மருத்துவக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறும் போது அவரது உடல்நிலை எலும்பியல் துறையின் டாக்டர் கவுரவ் குப்தாவால் கண்காணிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படாமல் பண்ட் நன்றாக இருக்கிறார். அவருடன் அவரது தாயார் மருத்துவமனையில் இருக்கிறார்.

எய்ம்ஸ்-ரிஷிகேஷில் விளையாட்டு காயங்கள் பிரிவை கவனித்து வரும் டாக்டர் கமர் ஆசம் கூறும் போது பண்ட் தசைநார் காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும். அது கடுமையானதாக இருந்தால், இன்னும் அதிக காலம் எடுக்கலாம். மேலும் மதிப்பீடு அவரது விரிவான காயம் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என கூறினார்.


Next Story