சூர்யகுமார் யாதவுக்கு மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்


சூர்யகுமார் யாதவுக்கு மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்துகளிலேயே அவுட் ஆனார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஒருநாள் போட்டியில் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்துகளிலேயே அவுட் ஆனார்.

இதனால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை முயற்சித்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்தார். இதே போல் சில முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

சூர்யகுமார் போன்ற திறமையான வீரரை ஆதரிப்பதன் மூலம் அணி நிர்வாகம் சரியானதை செய்வதாக நான் கருதுகிறேன். நன்றாக விளையாடிய வீரருக்கு எப்போதும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடாதீர்கள். இது சரியானதல்ல.

சஞ்சுசாம்சன் மோசமாக செயல்பட்டால் வேறுயாரையாவது பற்றி பேசுவீர்கள். அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை ஆதரிக்க முடிவு செய்திருந்தால் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால் இறுதி முடிவு நிர்வாகத்தின் கையில் தான் உள்ளது.

ஒருநாள் போட்டியில் பேட்டிங் வரிசையை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் இறக்கியதற்கு சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும். போட்டி முடிந்ததும் பேசுவது மிகவும் எளிதானது. சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் களம் இறக்கிய பின்னணியில் அவர் போட்டியை வெற்றிகரமாக முடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story