"தோல்வி எங்களை காயப்படுத்துகிறது" - பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்


தோல்வி எங்களை காயப்படுத்துகிறது - பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்
x
தினத்தந்தி 23 Oct 2023 6:04 PM GMT (Updated: 23 Oct 2023 6:23 PM GMT)

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி தங்களை காயப்படுத்துவதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார்.

சென்னை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹாக்கும், அப்துல்லா சபீக்கும் களமிறங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. இமாம் உல் ஹாக் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சபீக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிவந்த சபீக், 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நட்சத்திர ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சவுத் சகீல் 25 ரன்களுக்கு அவுட்டானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்சாகி வெளியேறினார். இறுதியில் சதாப் கான் (40) மற்றும் இப்திகார் அகமது (40) ஆகியோரின் அதிரடியினால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை திரட்டினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 130 ரன்களை சேர்த்த நிலையில் பிரிந்தது. குர்பாஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இப்ராகிம், 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஸ்மத்துல்லா இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

போட்டிக்குப் பின்னர் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், "எங்களிடம் நல்ல ஸ்கோர் இருந்தது, ஆனால் பந்துவீச்சில், நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்காததால், நாங்கள் வெற்றிப்பாதைக்கு வரமுடியவில்லை. ஒரு உலகக் கோப்பையில், நீங்கள் ஒரு துறையில் கூட சிறப்பாக செயல்படவில்லை என்றால் கூட தோல்வியடைவீர்கள்.

பந்துவீசும்போது நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், ஆனால் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, எல்லாப் புகழும் ஆப்கானிஸ்தானுக்குத்தான். நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடவில்லை, (குறிப்பாக) பந்துவீச்சு மற்றும் பீல்டிங். ஆடுகளம் இரண்டாவது இன்னிங்சிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் அவர்களின் பேட்ஸ்மேன்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கமுடியவில்லை" என்று அவர் கூறினார்.


Next Story