ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் இனவெறி சர்ச்சை : கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கண்டனம்

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட இனவெறி சர்ச்சைக்கு கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் இனவெறி சர்ச்சை : கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கண்டனம்
Published on

கொச்சி,

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நேற்று இரவு கொச்சியில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியும், பெங்களூரு எப்.சி. அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியின் வீரர் ஒருவர் தான் இனவெறிக்கு உட்பட்டதாக அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதில் பெங்களூரு அணி வீரர் ரியான் வில்லியம்ஸ் கேரளா அணியின் ஐபோன் டோங்லிங்குக்கு எதிராக இனவெறி குறித்து கூறியுள்ளார் என தெரியவந்தது. இந்த சம்பவம் போட்டியின் 82-வது நிமிடத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்து கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, தொடக்க ஆட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. போட்டியின் இடையே பெங்களூரு வீரரால் எங்கள் வீரருக்கு அவமரியாதை மிக்க சைகை காட்டப்பட்டது எங்கள் கவனத்துக்கு வந்தது.

இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த உரிய அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளோம். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம். மேலும் கால்பந்து என்பது பல்வேறு பின்னணிகள் மற்றும் கலாசாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு விளையாட்டு. மரியாதைக்குரிய ஒரு களம். எனவே எங்களது அணியில் இனவெறி போன்ற பாகுபாடுகளுக்கு இடமில்லை, என்று அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com