ஆசிய கோப்பை ஆக்கி: இந்தோனேசியாவை 16-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா


ஆசிய கோப்பை ஆக்கி: இந்தோனேசியாவை 16-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா
x

இந்திய அணி இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஜகார்த்தா,

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் பிரேந்திர லாக்ரா தலைமையிலான நடப்பு சாம்பியன் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' கண்டது. அடுத்த ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

தற்போது ஒரு புள்ளியுடன் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று இந்தோனேசியாவை எதிர்கொண்டது. இன்றைய ஆட்டத்தில் மிக அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி களமிறங்கியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் 6-0 என முன்னிலையில் இருந்த இந்திய அணி, அதற்கு பின்னர் சூறாவளியாய் சுழன்றடித்து விளையாடியது. குறிப்பாக திப்சன் டிர்கி மற்றும் அபாரன் சுதேவ் ஆகியோர் ஆட்டத்தை தலைகீழாக மாற்றினர். திப்சன் டிர்கி 4 கோல்கள் அடிக்க, சுதேவ் ஹாட்ரிக் கோல் அடிக்க, செல்வம், பவன் மற்றும் மூத்த வீரர் எஸ்.வி.சுனில் பிரேஸ் கோல் அடித்து அசத்தினார்.

இதனால் இந்திய அணியால் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்த முடிந்தது. அத்துடன் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கின் பயிற்சியின் கீழ் விளையாடும் இளம் இந்திய அணியினர் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு அடியெடுத்து வைத்துள்ளது.


Next Story