புரோ கபடி லீக் தொடர்; பிளே - ஆப் சுற்று போட்டிகள் நாளை தொடக்கம்


புரோ கபடி லீக் தொடர்; பிளே - ஆப் சுற்று போட்டிகள் நாளை தொடக்கம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 25 Feb 2024 9:02 AM GMT (Updated: 25 Feb 2024 12:27 PM GMT)

12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த 21-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

ஐதராபாத்,

10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த 21-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. லீக் ஆட்டங்களின் முடிவில் புனேரி பல்தான் (96 புள்ளிகள்), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92), தபாங் டெல்லி (79), குஜராத் ஜெய்ண்ட்ஸ் (70), அரியானா ஸ்டிலர்ஸ் (70), பாட்னா பைரேட்ஸ் (69) ஆகிய அணிகள் முறையே முதல் 6 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் இந்த தொடரில் பிளே - ஆப் சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. இதில் முதல் 2 இடத்தை பிடித்த புனே, ஜெய்ப்பூர் அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாடும். இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை எலிமினேடர் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த டெல்லி அணி ஆறாவது இடத்தை பிடித்த பாட்னா அணியுடன் மோதுகின்றது.

இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் புனேயுடன் மோதும். இரு அணிகளும் மோதிய ஒரு ஆட்டம் 39-39 என்ற கணக்கில் 'டை' ஆனது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 38-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தொடந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்த குஜராத் அணியும் ஐந்தாம் இடத்தை பிடித்த அரியானா அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் ஜெய்ப்பூர் அணியுடன் விளையாடும்.

இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய லீக் ஆட்டத்தில் அரியானாவே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. அரையிறுதியில் நுழைய 4 அணிகளும் கடுமையாக போராடும். இதனால் எலிமினேட்டர் ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும். அரையிறுதி போட்டிகள் வருகிற 28-ந் தேதியும், இறுதி போட்டி மார்ச் 1-ந் தேதியும் நடைபெறுகிறது.


Next Story