கைப்பந்து லீக் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்


கைப்பந்து லீக் போட்டி:  சென்னையில் இன்று தொடக்கம்
x

இன்று தொடங்கி மார்ச் 21-ந் தேதி வரை நடக்கிறது

சென்னை,

3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி மார்ச் 21-ந் தேதி வரை நடக்கிறது. ஐ.பி.எல். பாணியில் உள்நாட்டு வீரர்களுடன், வெளிநாட்டினரும் இணைந்து களம் காணும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆமதாபாத் டிபென்டர்ஸ், அறிமுக போட்டியில் சாம்பியனான கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், மும்பை மீட்டியார்ஸ், புதிய வரவான டெல்லி டூபான்ஸ் ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்5 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 5 சுற்றில் (மார்ச் 11-18) ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளை தலா ஒரு முறை சந்திக்கும். இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

தொடக்க நாளான இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் முத்துசாமி தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணி, அகின் தலைமையிலான சென்னை பிளிட்சை சந்திக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பிடித்த பங்கஜ் ஷர்மா தலைமையிலான பெங்களூரு டார்படோஸ், அஷ்வால் ராய் தலைமையிலான கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.



Next Story